ஜி.கே.வாசன் தலைவராக இருந்தபோதே மூப்பனார் படம் இல்லையே.... அம்பலப்படுத்தும் பிரபு கோஷ்டி!
சென்னை: காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படத்தை எடுக்கச் சொல்கிறார்கள் என்று கூறி பிரச்சினை கிளப்பும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள், வாசன் தலைவராக இருந்தபோதே உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படமும் இல்லை, காமராஜர் படமும் இடம்பெறவில்லை என்பதை மறந்து விட்டார்களா என்று முன்னாள் அமைச்சர் பிரபுவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலக முக்கியக் காரணமே, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போடக் கூடாது என்று கட்சி மேலிடம் கூறுகிறது என்பதுதான்.
ஆனால் இது அப்பட்டமான புளுகு என்பதை காங்கிரஸ் மேலிடமே மறுத்து விட்டதாக கூறியுள்ள பிரபு ஆதரவாளர்கள், வாசன் தலைவராக இருந்தபோதே காமராஜர் படத்தையும் மூப்பனார் படத்தையும் போடாமல்தான் உறுப்பினர் அட்டையை வழங்கியதாகவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் பதிலடி
வாசன் தரப்பினருக்கு பேஸ்புக் மூலம் பிரபு ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பொய் பேச்சு
குறிப்பாக உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படம் குறித்த வாசன் தரப்புக்கு அவர்கள் புகைப்பட ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வி.எம்.சி.மனோகரனின் பதிலடி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.எம்.சி.மனோகரன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மரியாதைக்குரிய திரு G,k வாசன் தலைவர் அவர்களுக்கு, தாங்கள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தபோது தமிழ் நாடு முழுவதும் உங்கள் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட மாநில கமிட்டி பொது குழு உறுப்பினருக்கு உரிய அடையாள அட்டையில் காமராஜர் படமும் இல்லை, மூப்பனார் படமும் இல்லை என்பதனை நியாபகப்படுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சோனியா படம் மட்டுமே
இதுதொடர்பாக ஒரு மாதிரி படத்தையும் அவர் இணைத்துள்ளார். அது 2004-06ம் ஆண்டுக்கான உறுப்பினர் அட்டையாகும். கோவையைச் சேர்ந்த ஓ.பி. உமாபதி என்பவருக்கு அளிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை. அதில் ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி என்று இடம் பெற்றுள்ளது. புகைப்படமாக உறுப்பினரின் படம் தவிர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படம் மட்டுமே உள்ளது.

ஜி.கே.வாசனுக்குப் பிறகு
ஜி.கே.வாசனுக்குப் பிறகு தங்கபாலு போன்றோர் தலைவராக இருந்துள்ளனர். ஆனால் வாசன் இருந்த காலத்திலேயே அவரது தந்தை படம் இல்லாமல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டிருப்பதையும், ஆனால் இப்போது அவர்கள் அதைப் பிரச்சினையாக்கி வெளியேறியுள்ளதையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர் வாசன் எதிர்ப்பாளர்கள்.

ஷேர் செய்து அதிருப்தியை வெளிப்படுத்திய ஜோதிமணி
இந்த பேஸ்புக் பதிவை தனது பக்கத்தில் ஷேர் செய்து, கரூர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோதிமணி சென்னிலையும் வாசன் கோஷ்டியினருக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications