யானைகளுக்கு உணவாக மூங்கிலை வனப்பகுதிகளில் அதிகளவில் வளர்க்க வேண்டும்- நீலகிரி கலெக்டரிடம் கோரிக்கை
ஊட்டி: நீலகிரியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் யானைகளுக்கு தேவையான உணவுப் பொருளான மூங்கில் போன்றவற்றை காட்டுப் பகுதிகளில் வளர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், "கூடலூரில் செக்ஷன் 17 நிலங்களில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை காண்பித்து, விவசாயிகளுக்கு தேயிலை நாற்று வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஓவேலி உள்பட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட் செக்ஷன்-17 நிலங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்தல், கிராமப்பகுதிகளில் மின் இணைப்பு, தொலைதொடர்பு வசதிகள், கிணறுகள், கைப்பம்புகள் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கலாம் என்று அனுமதி அளித்து உள்ளது.
மேலும் பொதுமக்களின் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் அமைத்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது. எனவே செக்ஷன்-17 நிலங்களில் வளர்ச்சி பணிகளை தடை செய்யாமல், நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியில் கிடைப்பது இல்லை. எனவே வனத்துறையினர் யானைகளுக்கு தேவையான மூங்கில் உள்ளிட்ட உணவுகளை வனத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications