ஆபரேசன் ஸ்டாலின்… கொத்து கொத்தாக திமுகவில் இணையும் மதிமுகவினர்- கொதிப்பில் வைகோ
சேலம்: மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பத்துபேரையாவது திமுகவில் இணைக்கவேண்டும் என்ற ஸ்டாலினின் ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.
மதிமுகவில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்துள்ளார். சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக் கண்ணன், திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார் மதிமுக மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரும் திமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இப்போது சேலம் மாவட்ட செயலாளர் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் ஐக்கியம்
சேலம் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த தாமரைக்கண்ணன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவராக இருந்த ஜெயவேல் உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து, திமுகவில் இணைந்தனர்.
மதிமுக மாவட்ட துணை செயலாளர்களாக இருந்த எஸ்.வி. ராஜேந்திரன், ஆனந்தி கண்ணன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த ஆறுமுகம் ஆகியோரும் இணைந்தனர்.

மகளிரணி மாநில செயலாளர்
மகளிரணி மாநில செயலாளர் குமரி விஜயகுமாரி ஆகியோரும் அவர்களோடு திமுகவில் இணைந்தனர். இவர்களுடன், சேலம் மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.ராஜேந்திரன், டி. ஆனந்தி கண்ணன், சேலம் மாவட்ட அவை தலைவர் ஜெயவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வாழப்பாடி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, ஓமலூர் ஒன்றிய செயலாளர் கு.பழனிசாமி, சேலம் ஒன்றிய செயலாளர் கே.ராஜேந்திரன், பெருமாள், சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு, சேலம் சுண்ணாபுரம் எஸ்.வி.ராஜேந்திரன், கு.சீ.வெ.நகர் டி.ஆனந்த கண்ணன் ஆகியோர் மதிமுகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

ஸ்டாலின் ஆபரேசன்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் இந்த இணைப்புக்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சேலம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் சேலம் ஆர்.ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, சதாசிவம், சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், பாலவாக்கம் சோமு ஆகியோரும் இந்த இணைப்பின் போது உடனிருந்தனர்.

22 ஆண்டுகாலம்
பின்னர், குமரி விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
மதிமுகவில் கடந்த 22 ஆண்டுகளாக நான் பணியாற்றி வந்தேன். இன்றுள்ள சூழ்நிலையில் திராவிட இயக்கம் திக்கற்ற நிலையில் இருக்கிறது. எனவே, அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மூன்று மாதத்திற்கு முன்பு வைகோ கூறினார். ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றி ஐந்து கட்சிகள் கொண்ட கூட்டு இயக்கம் எனது தலைமையில் இயங்கும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூறியபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் எனவே, திராவிட இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம் என்பதால் நாங்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளோம் என்று கூறினார் குமரி விஜயகுமார்.

வைகோவின் செயல்பாடு
எங்களை தொடர்ந்து இன்னும் நிறைய பேர் வர இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களும் வருவார்கள். வைகோவின் செயல்பாடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய இந்த நேரத்தில் வைகோ நிலைப்பாட்டால் எங்களது உழைப்பு வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார் குமரி விஜயகுமார்.

புத்துணர்ச்சி கிடைத்துள்ளது
நாங்கள் இன்று மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளோம். எங்களை கருணாநிதியும், ஸ்டாலினும் தாய் உள்ளத்தோடு வரவேற்றனர். எங்களது உழைப்பு வீணாக கூடாது என்பதால் நாங்கள் திமுகவில் இணைந்துள்ளோம் என்று கூறியுள்ளார் தாமரை கண்ணன். இப்போது நாங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளோம். வைகோ ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறான முடிவை எடுக்கிறார்.

நிறைய வருவார்கள்
கட்சியில் மற்றவர் கருத்துகளை ஏற்க வைகோ மறுக்கிறார். அவர் எடுத்த முடிவு மதிமுகவினரிடையே மன குமுறலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் எங்களது சுயமரியாதை காப்பற்றப்படும் என்பதால் இங்கு வந்துள்ளோம், எங்களை தொடர்ந்து இன்னும் நிறைய பேர் வர உள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு ஸ்டாலின் வரும் போது ஏராளமான மதிமுகவினர் திமுகவில் இணைவார்கள் என்று கூறினார் தாமரைக்கண்ணன்.

வலை வீசும் ஸ்டாலின்
2016 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழரசுவின் மகன் திருமணத்திற்கு வந்த வைகோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் திடீரென்று கோவில்பட்டியில் பேசிய வைகோ திமுக, அதிமுக உடன் கூட்டணி இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனி அணியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக வைகோ அறிவிக்கவே மதிமுகவினருக்கு வலை வீச தொடங்கிவிட்டார் ஸ்டாலின்.

இணைய தள ஒருங்கிணைப்பாளர்கள்
இனி சமூக வலைத்தளங்களும், இணையதளங்களும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர்களையும் வலைவீசத் தொடங்கியுள்ளது திமுக. ஃபேஸ்புக், டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பவர்களுக்கு பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். திமுகவின் இந்த செயல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கொதிப்படையச் செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications