தென் மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - ரமணன்
சென்னை: லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிய இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், தென் தமிழகம், கேரளம், லட்சத்தீவுகள் பகுதியில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுகள் அருகில் நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இந்த மழைக்கு காரணம்.

இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது இலங்கை கடல் பகுதி வரையில் நீடிப்பதால், கடலார மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்றும் நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வரும் 19, 20ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், வட தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என என ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் 3 சென்டி மீட்டர்மழை பதிவாகியுள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications