சென்னையில் செவிலியர்கள் போராட்டம்... அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிப்பு- 1000 பேர் கைது
பணி நிரந்தரம் வேண்டி செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வேண்டி செவிலியர்கள் போராடி வருகிறார்கள். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ம் ஆண்டு செவிலியர்களாக 11,000க்கும் அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்கு இன்னமும் பணி நிரந்த ஆணை வழங்கப்படவில்லை. ஏழாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு வேண்டியும் கடந்த சில மாதங்களாகவே செவிலியர்கள் போராடி வருகிறார்கள். கடந்த வாரமும் டி.எம்.எஸ் வளாகத்தில் போராடிய இவர்கள் அரசு தங்களிடம் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
செவிலியர்கள் போராட்டம்
தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் 11,000க்கும் அதிகமான செவிலியர்கள் இன்று டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு செவிலியர்கள் வந்துள்ளனர்.
1000 பேர் சிறைபிடிப்பு
டி.எம்.எஸ். மருத்துவ இயக்குநகரம் வளாகத்தில் இன்று காலை முதலே செவிலியர்கள் திரண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இதில் 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தனர். திடீரென வளாகத்திற்கு வெளியே வந்து சாலைகளில் போராட முற்பட்டதால் போலீஸார் அவர்களை சிறைபிடித்தனர்.
செவிலியர்கள் வாக்குவாதம்
சாலைகளில் போராட முயன்ற செவிலியர்களால் போலீஸாருக்கும், செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவலர்களின் அதிக அளவில் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் அவதி
வார முதல் நாளான திங்கட்கிழமை வழக்கம் போல பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்வோர் இதனால் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல முறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததாலே போராட்டம் நடத்துவதாக செவிலியர்கள் தெரிவித்து உள்ளனர். இதில் பங்கேற்க 10000 அதிகமானோர் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இவர்களை ஆங்காங்கே போலீஸார் கைது செய்து வருகிறார்கள்.