தமிழகத்தில் 30,000 "பத்தாப்பு" டாக்டர்கள் – விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மதுரவாயல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீம்ராவ் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் மக்களுக்கான மருத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட பீம்ராவ், "மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்தையாவது ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி பெற்று தான் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
மக்கள் நலன் கருதி இந்த விதியினை மாற்றி அமைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மேலும், மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக செய்திகள் வருகிறது. மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற போலி மருத்துவர்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications