புறக்கணிக்கப்படும் தமிழர்கள்.. துணைவேந்தர்களாகும் வெளிமாநிலத்தவர்கள்.. உரிமை மறுக்கப்படுகிறதா?
தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தமிழக கல்வியாளர்களுக்கு அவர்களது உரிமை மறுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. இது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணை வேந்தராக பிரமீளா குருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, இதில் பெரிய முறைகேடு நடந்து இருக்கிறது என்று புகார் வைத்து இருந்தார்.
அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது நியமனம்தான் பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. புனே சாவித்ரிபாய் புலே பல்கலை.யில் இவர் சட்டப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பின் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இருப்பதாக கூறப்பட்டது. அவர்களின் தூண்டுதலின் பெயரிலே இவர் நியமிக்கப்பட்டார் என்றும் புகார் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெருமை வாய்ந்த அண்ணா பல்கலை.க்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கும் தமிழக கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்ப்பு எதையும் தமிழக ஆளுநர் பொருட்படுத்தவில்லை.
தமிழக கல்வி நிறுவனங்களில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. முக்கியமாக தமிழக கல்வியாளர்களுக்கு துணை வேந்தர் ஆகும் தகுதி இல்லையா, கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்களா, தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறதா என்று இது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
தமிழக கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சியாக மூன்று வெளிமாநில கல்வியாளர்கள் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications