பெரம்பலூர்: 6 வது பெண் குழந்தை… பெற்ற தாயே ரூ. 10 ஆயிரத்திற்கு விற்ற கொடுமை
பெரம்பலூர்: குடும்ப வறுமை காரணமாக பச்சிளம் பெண் குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கு பெற்ற தாயே வெளிநாட்டவருக்கு விற்ற சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கரம்பியம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்- முத்துலட்சுமி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துலட்சுமிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு 6வதாக பெண் குழந்தை ஒன்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தது.
குடும்ப வறுமையின் காரணமாக ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் 6வதாக பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என தெரியாமல் கோவிந்தனும், முத்துலட்சுமியும் தவித்து வந்தனர்.
இந்நிலையில், பிறந்த குழந்தையை நர்ஸ் வீரம்மாள் என்பவரின் உதவியுடன் நேற்று முன்தினம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள வெளிநாட்டு தம்பதியினருக்கு விற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவிற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் டாக்டர் அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சேசு ஆகியோர் அடங்கிய குழு, பணத்திற்கு விற்கப்பட்ட குழந்தையை பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது, ‘‘குழந்தை விற்கப்பட்டது குறித்து ரகசிய தகவல் எனக்கு வந்ததையடுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் அடங்கிய மருத்துவக்குழு பணத்திற்கு விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட அந்த குழந்தை தற்போது நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் முறையாக சட்டப்படி தத்தெடுக்க வேண்டும். இதுபோல், குழந்தைகளை விற்கவோ, வாங்கவோ கூடாது. அப்படி மீறி யாராவது செய்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்தார். வறுமை சூழ்நிலை காரணமாக பச்சிளம் குழந்தையை விலை பேசி விற்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications