வந்த விலைக்கு குழந்தையை விற்று விட்டு மீண்டும் திரும்ப கேட்டு கதறி அழுத பெண்!
பெற்ற குழந்தையை ஒரு தாய் விலைக்கு விற்றுள்ளார்.
சேலம்: பாரம் என விலைக்கு விற்றுவிட்டு, மீண்டும் திரும்ப கேட்டு கதறி அழுத பெண்ணை என்ன செய்றது?
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி. வயது 35. இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்துவிட்ட ராணி, பாலு என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதில் மீண்டும் ராணி கர்ப்பமாகியுள்ளனர். இதையடுத்து பிரசவத்திற்கு சேலம் அரசு மருத்துவமனையில் 3 மாதத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அப்போது 4-வதாகவும் பெண் குழந்தைதான் பிறந்துள்ளது. இதனால் அவரது கணவர், "ஏற்கனவே 3, இப்போ 4-வதாகவும் பெண்ணா?" என்று கோபித்து கொண்டு சென்றுவிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி கணவர் கோபித்து கொண்டு போய்விடவும், அந்த குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் ராணி கதறி அழுதிருக்கிறார். அப்போது, அப்போது, ராணிக்கு பழக்கமானவர் ஜெயா என்பவர் அங்கு வந்தார். அவர், மருத்துவமனையில் துப்புரவு வேலை செய்பவர். ஜெயாவை பார்த்ததும் பழக்கம் காரணமாக அவரிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார் ராணி.
ஜெயா தந்த ஐடியா
அதற்கு ஜெயா, "டாக்டர் ஒருத்தருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்களுக்கு குழந்தை இல்லை. இந்த குழந்தையை அவங்ககிட்ட கொடுத்துடலாம்" என்று ஐடியா தந்துள்ளார். கணவன் போன வேதனையிலும், 4-வதாகவும் குழந்தை பிறந்துவிட்ட துயரத்திலும் அதற்கு ஒப்புக் கொண்டார் ராணி. இதையடுத்து, மேச்சேரி பஸ் ஸ்டாண்டிற்கு குழந்தையை தூக்கி கொண்டு வர சொன்னதால், ராணியும், அங்கு சென்றார்.
காதிலே வாங்காத ஜெயா
பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர்கள், பெண் குழந்தையை வாங்கி கொண்டு 50 ஆயிரம் ரூபாயை ராணியிடம் கொடுத்து விட்டு சென்றனர். ஆனால் நாட்கள் ஆக ஆக ராணியின் மனம் இளக தொடங்கியது. பிரிந்து சென்ற குழந்தையையே மனம் நாடியது. அதனால் மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கு ஜெயாவிடம், "அந்த குழந்தையை திரும்ப எனக்கே கொடுத்திடு" என்று 2 மாசத்துக்கு முன்னாடி கேட்டிருக்கிறார். ஆனால் ஜெயா அதற்கு எந்த பதிலும் சொல்லாமல், ராணி பேச்சை காதிலே வாங்கி கொள்ளாமல் இருந்துள்ளார்.
பணம் திரும்ப தரேன்
என்றாலும் மீண்டும் ராணியால் குழந்தை நினைப்பை வாட்டி எடுத்தது. சரியாக சாப்பிட, தூங்க முடியாமல் தவித்தார். நேற்றும் மருத்துவமனைக்கு ஓடிவந்து, "ஜெயா... என் குழந்தையை திரும்ப கொடுத்துடு. அந்த குழந்தை இல்லாமல் என்னால இருக்க முடியல. நீ வாங்கி தந்த பணத்தைக் கூட திரும்ப தந்திடறேன். குழந்தையை மட்டும் வாங்கி தா" என்று கதறி அழுதார்.
கைமாறிய குழந்தை
இவ்வாறு ராணி அழுவதை கண்டு அங்கு வந்த மருத்துவமனை பாதுகாப்பு போலீசார், ராணியையும், ஜெயாவையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயா யாரிடம் குழந்தையை கொடுத்தார், ரூ50 ஆயிரம் கொடுத்து குழந்தையை வாங்கிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக போலீசார், கைமாறிய அந்த குழந்தையையும் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒரு தாயின் கதறல்
ஆட்டை விற்று, மாட்டை விற்று, சொத்தை விற்று, கடைசியில் பெற்ற குழந்தைகளையும் விற்க துணிந்துவிட்டனர். சாதாரண காக்கா, குருவி, ஆடு, மாடுகள்கூட பெற்ற குட்டிகளை மற்ற விலங்குகளிலிருந்து காப்பாற்ற போராட்டம் நடத்துகின்றன. ஆனால் தன் ரத்தமும் சதையினால் உருவான ஒரு உயிரை விற்க துணியும் மனப்பான்மை எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. எத்தனை பெண் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளுக்கு தாய் அவள்தானே? தெரியாமலும் அறியாமலும் தவறு செய்து விட்டு, தற்போது கதறி அழுது மனம் திரும்பியுள்ளாள் ஒரு தாய். என்னத்த சொல்ல.!