மன அழுத்தம்... பெற்ற தாயை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மகள் !
சென்னை: சென்னை அடுத்த பல்லாவரத்தில் மன அழுத்தம் காரணமாக பெற்ற தாயை கத்திரிகோலால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி மகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அனகாபுத்தூரை அடுத்து உள்ள குருசாமி நகரைச் சேர்ந்தவர் வனஜா (58). இவரது கணவர் பாலவரதராஜன் இறந்து விட்டார். வனஜாவுக்கு சுஜா, காயத்ரி (26) என இரு மகள்கள் உள்ளனர். சுஜாவுக்கு திருமணமாகிவிட்டது. காயத்ரி (26) பொறியியல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வனஜா தையல் படித்திருந்ததால், வீட்டிலேயே துணிகளை தைத்து தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் காயத்ரி சில மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் வனஜாவின் வருமானத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும், காயத்ரியின் பொறியியல் படிப்புக்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்ததால், வனஜா அவதிக்குள்ளானார்.
இதையடுத்து காயத்ரியை வேலைக்குச் செல்லுமாறு வனஜா வலியுறுத்தி வந்துள்ளார். எனினும், காயத்ரிக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் வேலை கிடைக்காத விரக்தியின் காரணமாக காயத்ரி மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் வனஜாவிற்கும், காயத்ரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலால் தாய் வனஜாவை குத்தியதில், அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து காயத்ரி உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார்.
ஆம்புலன்சில் வந்த மருத்துவர் சோதித்ததில் வனஜா உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சங்கர்நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்து காயத்ரியை உடனடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications