விதிகளை மீறி மவுலிவாக்கம் கட்டிடம் கட்டியதால் விபத்து- சட்டசபையில் ரகுபதி கமிஷன் அறிக்கை தாக்கல்!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் தயாரித்த அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாலேயே மவுலிவாக்கம் விபத்து ஏற்பட்டதாக ரகுபதி கமிஷன் அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடிகளுடன் கூடிய இரட்டை அடுக்குமாடி கட்டிடங்களில் ‘பி' கட்டிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர்.

இது பற்றி விசாரிக்க நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அரசு அமைத்து இருந்தது.
இந்த விசாரணை முடிந்து 225 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து ரகுபதி கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்டசபையில் ரகுபதி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில் இந்த விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்படுள்ள முக்கிய அம்சங்கள்:
- கட்டிடம் கட்டியவரும், அவருடைய கூட்டாளிகளும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாக விதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.
- ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைப்படத்தில் 46 தூண்கள் இடம் பெற்றதற்கு மாறாக 37 தூண்களை அமைத்து உள்ளனர்.
- 37 தூண்களில் 22 தூண்களுக்கு தாங்கும் திறனையும் விட அதிகமான சுமை உள்ளது.
- கடைக்கால் அமைப்பும் போதிய அளவில் பின்பற்றப்படவில்லை.
- தற்போது சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள இன்னொரு கட்டிடத்தையும் நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் பாதுகாப்பாக இடித்து தள்ள வேண்டும்.
- வீடுகளை இழந்தவர்களுக்கும், உயிர் இழந்தவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புக்கும் மதிப்பீடு செய்து இக்குழு உரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
இவ்வாறு ரகுபதி கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுயள்ளது.












Click it and Unblock the Notifications