தீபாவளிக்கு ஊட்டிக்கு போறீங்களா? மலை ரயிலில் டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? ரயில்வே முக்கிய அறிவிப்பு
மேட்டுப்பாளையம்: குன்னூர் மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் 16ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இரவு கனமழை பெய்த நிலையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து நேற்று முன் தினம் முதல் மீண்டும் இந்த பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்துள்ளன.
ரயில்வே டிராக்கில் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை வரும் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும் என்பதால் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மலை ரயிலை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த ரயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ரயில் என்பதால் பலர் இந்த ரயில் மூலம் ஊட்டிக்கு செல்ல விரும்புவார்கள். தற்போது மலை ரயில் ரத்து என்பதால் தீபாவளிக்கு ஊட்டிக்கு செல்ல முடிவு எடுத்தவர்கள் சாலை மார்க்கமாக கார், பைக் ஆகியவற்றில் செல்லலாம். மேட்டுப்பாளையம் வரை வந்துவிட்டு பிறகு அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம்.












Click it and Unblock the Notifications