ஆணழகனாக வலம் வந்து 'ஐ' விக்ரம் போல மாறிய 'மிஸ்டர் மெட்ராஸ்'... காரணம் ஒரு பேஸ்புக் 'ராணி'!
சென்னை: சென்னையைச் சேர்ந்த, ஆணழகன் பட்டம் வென்றவரை தனது ஆசை வலையில் வீழ்த்தி பல லட்சம் பணத்தைக் கறந்து கொண்டு மோசடி செய்து விட்டார் ஒரு பெண் என்று போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. இவரைப் போல மேலும் பல ஆண்களையும் அந்தப் பெண் ஆசை காட்டி மோசடி செய்திருப்பதாகவும் புகார் கிளம்பியுள்ளது.
வழக்கமாக ஆண்களிடம் பெண்கள் ஏமாறுவார்கள். சில நேரங்களில் பெண்களிடம் ஆண்கள் ஏமாறுவதுண்டு. அதுவும் எதிர்பாராத அளவுக்கு ரொம்பக் கேணத்தனமாக ஏமாறுவார்கள். அப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது கம்பீரத்தைத் தொலைத்து விட்டு தட்டுத் தடுமாறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

27 வயதான கார்த்திகேயன் எம்.பி.ஏ. படித்துள்ளார். 2009ம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் வென்றவர். போரூரில் வசித்து வருகிறார். தி.நகரில் ஜிம் வைத்துள்ளார். இது மிகவும் பிரபலமான ஜிம் ஆகும். இங்கு சினிமா நடிகர், நடிகையர் பல் வாடிக்கையாளர்களாம்.
கம்பீரமாக வலம் வந்த அவர் இன்று ஒரு பெண்ணால் பெரும் தலைக்குணிவுக்குள்ளாகி, போலீஸுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இவரின் சோகக் கதை இதுதான்:
திருப்பூரைச் சேர்ந்த ராணி (நிஜப் பெயர் அல்ல) என்பவருடன், கார்த்திகேயனுக்கு பேஸ்புக் மூ்லம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராணிக்கு தாயார் மற்றும் தங்கை மட்டும் உள்ளனர். பி.எஸ்சி படித்துள்ளாராம். பெங்களூரில் பணியாற்றி வந்தாராம்.
பேஸ்புக் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் உருகி உருகி காதலித்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூரில் வேலை பார்த்து வந்தவர் சென்னைக்கு மாறி வந்தார். அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் ரூம் எடுத்துத் தங்க வைத்தார் கார்த்திகேயன்.
பின்னர் தனது வீட்டில் காதலைச் சொன்னார் கார்த்திகேயன். அவர்களும் சம்மதிக்கவே போரூர் முருகன் கோவிலில் வைத்து ராணியை மணந்து கொண்டாராம் கார்த்திகேயன். இருப்பினும் இந்தத் திருமணம் குறித்து தனது வீட்டாரிடம் ராணி தெரிவிக்கவில்லையாம்.
ஒரு வருடம் ராணியும், கார்த்திகேயனும் குடித்தனம் நடத்தியுள்ளனர். கர்ப்பமும் ஆகியுள்ளார் ராணி. ஆனால் கணவருக்குத் தெரியாமல் கலைத்து விட்டாராம். அதன் பின்னர் கடந்த பொங்கலுக்காகக திருப்பூர் போனவர் மீண்டும் திரும்பி வரவே இல்லையாம். இதையடுத்து ராணியைச் சந்திக்க திருப்பூருக்கு போனாராம் கார்த்திகேயன். அவரிடம் பலமுறை பேசிப் பார்த்தும் ராணி திரும்பி வர மாட்டேன் என்று கூறி விட்டாராம்.
நான் உன்னைக் காதலிக்கவில்லை, திருமணமும் செய்யவும் இல்லை என்றும் கூறி விட்டாராம். ராணியின் தாயாரும் நடந்ததை மறந்து விடுங்கள் என்று கூறி விட்டாராம். தற்போது ராணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.
இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், ராணியிடம் ஏமாந்தவர்கள் பட்டியலில் தற்போது அதிகாரப்பூர்வமாக 3 பேர் இருக்கிறோம். எனக்கு தெரியாமல் இன்னும் நிறைய பேர் ஏமாந்தவர்கள் பட்டியலில் இருக்கலாம். என்னிடம் ரூ.7 லட்சம் வரை பணத்தை கறந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நான் சென்னை பாண்டி பஜார் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். தற்போது ராணி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அவர் என்னைப்போல மேலும் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றி விடக்கூடாது. அதற்காக போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications