தமிழகத்தில் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவல் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடம் விசாரித்ததில் தமிழகத்தில் பல தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை 7.10 மணிக்கு பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்வதற்காக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.
ஸ்வாதி உயிரிழப்பு:
இதில் ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி உயிரிழந்தார். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தனிப்படை அமைப்பு:
ஐஜி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் எஸ்பிக்கள் அன்பு, ஜெயகவுரி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சம்பவம் நடப்பதற்கு முன்பாக வழுக்கை தலை ஆசாமி ஒருவர் ரயில்வே ஸ்டேஷன் வாயிலை நோக்கி வேகமாக ஓடிவருவது தெரிய வந்தது.
சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்:
அந்த மர்ம நபரின் கையில் பொருட்கள் எதுவும் இல்லை. ரயிலில் இருந்து இறங்கி வருபவர்கள் கண்டிப்பாக ஒரு பையாவது கொண்டு வருவார்கள். ஆனால் அவர் எதுவும் கொண்டுவரவில்லை. அதே ரயிலில் திரும்பிச் செல்லவுமில்லை. இதனால் அவர்தான் குண்டு வைத்திருக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீடியோ படம்:
அவரது வீடியோ படத்தை சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார் அகர்வால் நேற்று வெளியிட்டார். இதற்கிடையில் வெடிகுண்டு வெடித்த பெட்டியில் சிதைந்த நிலையில் 2 பேக் கண்டுபிடிக்கப்பட்டது.
பைகளில் தடயங்கள்:
அவற்றை பரிசீலித்ததில் பெங்களூர் தடயங்கள் சிக்கின. இதனால் அவை பெங்களூரில் வாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் 2 எஸ்பிக்களும் பெங்களூர் விரைந்துள்ளனர்..
தீவிரவாதிகள் ஊடுருவல்:
மேலும், இக்குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மத்திய புலனாய்வுத் துறையினர் பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்திய பொழுது மேலும் பல தீவிரவாதிகள் பல்வேறு வகையில் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பலமான பாதுகாப்பு:
இதனால், மேலும் சில பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு தீவிரம்:
இதையடுத்து, சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள், கடலோரப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.