முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு: தமிழக அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய கேரளா!
தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான அளவீடு பணிகளை மேற்கொள்ள சென்ற தமிழக பொறியாளர்களை கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான ஆயத்தபணிகளில் தமிழக அரசு ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக மதகுகளில் குறியீடு வரையப்பட்டு கதவுகள் இயக்கி சரிபார்க்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதியான தேக்கடி புலிகள் காப்பகம் அருகே வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அப்பகுதியை புகைப்படம் எடுத்து தமிழக பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தேக்கடி சாலைப் பகுதியில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்பகுதி மக்களும் கேரள வனத்துறையினருடன் சேர்ந்து தமிழக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.