137 அடியைக் கடந்தது முல்லைப் பெரியாறு அணை!
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு 137 அடியைக் கடந்தது.
தமிழகம் - கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ‘கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்.

நேற்று முன்தினம் 136 அடியைக் கடந்த நீர்மட்டம், இன்று 137 அடியாத் தாண்டியது. 142 அடி வரை நீரைத் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கேற்ற நடவடிக்கைகளை தமிழக பொதுப் பணித்துறை செய்து வருகிறது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 2,494 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,756 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வழக்கமாக 456 கன அடி தண்ணீர்தான் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீரைக் கொண்டு வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த தண்ணீர் வருவதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயர வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 52.82 அடியாக இருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள மாநில தலைமை செயலாளர் பத்மபூஷன் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அணையில் உள்ள 13 மதகுகளில் ஒரு மதகு பழுதடைந்துள்ளது. அணையில் லேசான நீர்க்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். பழுதான மதகை தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும்',' என்றார்.












Click it and Unblock the Notifications