142 அடியை நெருங்கும் முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசின் தடையை மீறி ஆற்றில் மலர் தூவுகிறார் வைகோ!
தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கி உள்ளதால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முல்லை பெரியாறு ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தப்போகிறார். இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் தடை மீறி அங்கு செல்ல வைகோ முடிவெடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைப் பெரியாறு அணை 142 அடியை இன்னும் சிலமணிநேரத்தில் எட்டப்போகிறது. அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு வைகோ தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது.
இதனையடுத்து மதகுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 141 அடியை சனிக்கிழமை மாலை எட்டியது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்று மாலைக்குள் 142 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாயும் இரைச்சல் பாலத்தில், மலர்தூவி வணங்க வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதால் தடையை மீறி வைகோ செல்லவுள்ளதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.