முள்ளிவாய்க்கால் தினம்.. மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல தடை.. தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு
முள்ளிவாய்க்கால் தினத்தை அனுசரிக்கும் வகையில் மெரினாவில் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த போலீசார் மறுத்துள்ளனர். இதனால், மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள
சென்னை: மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைந்த ஈழத் தமிழர்களுக்கு மரியாதை செலுத்த கடற்கரை செல்லும் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் சட்டவிதி 41 அமலில் உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் விதிமுறையை மீறி கூட்டங்கள் நடத்தவோ போராட்டம் நடத்தவோ முற்படுவது சட்டவிரோதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி கூட்டமாக யாரும் கூடினால் அவர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

அஞ்சலி
மே 17 இயக்கம் சார்பில், இலங்கை இனப்படுகொலையில் பலியான ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தடுக்கும் வகையிலேயே போலீசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

தடையை மீறி..
இந்நிலையில், தடையை மீறி கூட்டம் கூடுவோம் என்றும் மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், அவ்வாறு அஞ்சலி செலுத்துவது தங்களின் மரபு என்றும், மரபை தடுக்க சட்டத்திற்கு வழி இல்லை என்றும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறினார்.

போலீசார் குவிப்பு
இந்நிலையில், மெரினா கடற்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடல் அலை எழும் இடத்தில் இருந்து சாலை வரையிலும், அண்ணா சமாதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்களுக்குத் தடை
இதனையும் மீறி தமிழ் ஆர்வலர்கள் யாரும் கடற்கரையில் கூடிவிடக் கூடாது என்பதற்காக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி வரை வாகனங்கள் எதுவும் இன்று செல்ல முடியாது.

கொந்தளிப்பு
போலீசாரின் கெடுபிடியால், ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தோடு, வெயில் தாங்க முடியாமல் மாலை வேலையில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications