ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. அதிரடி திட்டத்தை அமல்படுத்தும் ரயில்வே! டிடிஆர்களுக்கும் செக்?
சென்னை: டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளை சோதனை செய்யும் போது சில நேரங்களில் டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இது போன்ற தருணங்களில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் வகையில் திட்டம் ஒன்றை மத்திய ரயில்வே சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது ரயில்வேதான். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். மலிவான கட்டணம், சரியான நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பலரும் ரயில் பயணத்தைதான் பெரிதும் விரும்புகின்றனர்.
அதேபோன்ற சென்னை போன்ற பெருநகரங்களில் புறநகர் ரயில் போக்குவரத்தும் பயணிகளுக்கும் பெரும் வசதியாக உள்ளது. அன்றாட வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் இந்த மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர். எனினும் இதில் சிலர் டிக்கெட் இன்றி பயணிப்பது ரயில்வேயின் வருவாய்க்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் சில இடங்களில் நின்று பரிசோதனை செய்தாலும் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை பிடிப்பதிலும் அபராதம் விதிப்பதிலும் சில சிரமங்களை டிக்கெட் பரிசோதகர்கள் எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் பயணிகளுடன் டிக்கெட் பரிசோதகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் பயணிகள் டிக்கெட் பரிசோதகர்கள் இடையே கை கலப்பு ஏற்படும் சூழல் கூட உள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதம் செய்வதோடு..அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
அதேபோல், டிக்கெட் பரிசோதகர்கள் மீதும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. இதுபோன்ற தருணங்களில் யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது ரயில்வே நிர்வாகத்திற்கு சவாலானதாக உள்ளது. இதனால், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக ரயில்வே புதிய திட்டம் ஒன்றை சோதனை அடிப்படையில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதாவது, டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் புறநகர் ரயில்களில் டிக்கெட் பரிசோதனையின் போது வெளிப்படத்தன்மை உறுதி செய்ய முடியும் என்று ரயில்வே கூறுகிறது. முதல் கட்டமாக மும்பையில் 50 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் இடையே சில சமயம் பிரச்சினை ஏற்படும் போது வரும் புகார்களில் யார் மீது தவறு உள்ளது என்பதை கேமரா மூலம் கண்டறிய முடியும் என்றும் இதனால், தவறு உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்க கியூ ஆர் கோடு வசதியையும் ரயில்வே அறிமுகம் செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications