தண்ணீர் இல்லாததால் மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் திடீர் தர்ணா
ரயில் கழிவறைகளில் தண்ணீர் வராத ஆத்திரத்தில் ரயிலை நிறுத்தி, ஈரோட்டில் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளில் தண்ணீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஈரோடு ரயில் நிலையத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வழியாக வாரம்தோறும் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வரும்போது ரயிலில் தண்ணீர் இல்லை. அப்போது அதில் இருந்த பயணிகள் ஈரோடு ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.
வெகுநேரம் ஆகியும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஈரோடு ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில் எஞ்சின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர் . இதனால் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டத்து.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தல் தண்ணீர் நிரப்பப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் பின்னர் ரயில் புறப்பட்டுச்சென்றது.
வட இந்தியாவில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பெரும்பாலும் பெட்டிகளில் தண்ணீர் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.