ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் மணிகண்டன் நீக்கம்- முனியசாமி நியமனம்: ஜெ.,
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மணிகண்டனை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மணிகண்டனுக்கு பதிலாக அதிமுக மாவட்ட செயலாளராக முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக மருத்துவ அணி துணை செயலாளராக மணிகண்டன் நீடிப்பார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து முனியசாமி நீக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார் . முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளராக முருகன், கமுதி ஒன்றிய செயலாளராக காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன், அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை செ.முருகேசன் மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். இவரது அண்ணன் சசிக்குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், அண்ணன் மனைவி கவிதா சசிக்குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவராகவும் உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானையில் அதிமுகவும், முதுகுளத்தூரில் காங்கிரசும் வெற்றி பெற்றது.
இதில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இளம் வயதிலேயே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவியேற்றார். இதற்கு பரிசாக மாவட்டத்தில் சீனியர் பலர் இருந்தும் டாக்டர் மணிகண்டனுக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னர் மாவட்டச் செயலாளர் பதவியும் தேடி வந்தது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மணிகண்டனுக்கு பதிலாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனியசாமி கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். அவரை நீக்கிவிட்டு தர்மரை நியமித்தார் ஜெயலலிதா. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தர்மரை நீக்கிவிட்டு மணிகண்டனை மாவட்ட செயலாளர் ஆக்கினார். இப்போது மணிகண்டனை நீக்கிவிட்டு மீண்டும் முனியசாமியை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார் ஜெயலலிதா.