அரசியல் உமிழும் வெப்பங்கள்.. ஆன்மீக அரசியல் வெந்து போய்விடும்: ரஜினிக்கு முரசொலி வார்னிங்
அரசியல் உமிழும் வெப்பங்களால் ஆன்மிக அரசியல் வெந்து போய்விடும் என ரஜினிக்கு முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: அரசியல் உமிழும் வெப்பங்களால் ஆன்மிக அரசியல் வெந்து போய்விடும் என்பதை ரஜினி உணர வேண்டும் என அவருக்கு முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முரசொலி நாளிதழ், இவைதான் ஆன்மிக அரசியலா என்ற தலைப்பில் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. அதில் அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கு முன் ரஜினிகாந்த் - ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம்- அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி- பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது- இவை எல்லாமே அவரது நிலைக்குலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது!
ஆன்மிக அரசியல் நடத்தப் போவதாக அறிவித்த அவரது "ஆன்மிகம்" கேள்விக்குறியாகி விட்டது.! யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம்! ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம்.

போராட்டங்கள்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் குறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது என்று தூத்துக்குடியில் பேசும் அவர் வரவிருக்கும் தனது படத்தில் அனைத்துக்கும் போராடுவோம் என்கிறார்.

ரஜினி தெளிவாக்க வேண்டும்
இவையெல்லாம் சுட்டிக் காட்டப்பட்டு சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன! இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினிதான் தெளிவாக்க வேண்டும்!

மறுப்புத் தெரிவிக்கும் வகையில்...
பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் நிலை மறந்து பதற்றத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்தா ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில் மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்!.

அது நூறு முறை சொன்ன மாதிரி
"நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி" என்று திரைப்படங்களில் பஞ்ச் டைலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!.

உணர்ச்சி
தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா? அந்தப் போராட்டத்தில் புகுந்த விஷக்கிருமிகள் , சமூகவிரோதிகளைத் தனக்கு தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்தத் தயங்குவதேன்? தனக்கு தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மிக அரசியலா ? ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா ?

போராட்டம்
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடு்ம எனக் கருத்து கூறியுள்ளார் ரஜினி! அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது படமான காலாவில் அனைத்துக்கும் போராடுவோம், புரட்சி உருவாக்கப் போராடுவோம்... என பாடி நடித்துவிட்டு நிழலில் ஒன்று நிஜத்தில் வேறு ஒன்று எனச் செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும் அல்லது தெளிவாக வேண்டும்!

அங்கே செல்கிறார்
தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப் புறப்பட்டவர், அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு எதிராகப் பேட்டி அளிக்கிறார். மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதி போல தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறார். துப்பாக்கிச் சூடு நடைபெற்று பல நாட்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே செல்கிறார்- சென்று, துப்பாக்கிப் பிரயோகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார் , போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதை தெளிவாக்கவில்லையா?

அரசியல் சூட்டின்
இதனைத்தான் தெளிவாக நமது செயல்தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோத் தெரிகிறது என்று. அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி! அவர் அன்றி நேரிடையான அரசியல்வாதி அல்ல, ஆனால் இன்று யாருடைய அச்சுறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்!.

உள்ள உரமும் தேவை
எல்லாருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக வில்லனாக விமர்சிக்கப்படுகிறார்! அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை! ஆன்மிக அரசியல் என்ற போர்வைப் போர்த்திக் கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்து போக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும் என்று முரசொலி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications