திமுக, - அதிமுக இடையே பிளவுபட்டுக் கிடக்கும் முஸ்லீம் கட்சிகள்!
சென்னை: தமிழகத்தின் முஸ்லீம் வாக்கு வங்கி பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. திமுகவிடம் சிலரும், அதிமுகவிடம் சிலருமாக பிரிந்து நிற்கின்றன முஸ்லீம் கட்சிகள்.
பல்வேறு முஸ்லீம் கட்சிகள் இருந்தாலும் கூட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக், இந்திய தெளஹீத் ஜமாத், மனித நேய மக்கள் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் ஆகியவைதான் பெரிய கட்சிகளாகும்.
இதில் மனித நேய மக்கள் கட்சி சமீபத்தில் உடைந்தது. அதிலிருந்து பிரிந்த தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இயங்கி வருகிறார். இப்படி பல கடசிகள் இருந்தும் கூட ஒரே கட்சியாக, ஒரே குடையின் கீழ் நில்லாமல் திமுக - அதிமுக இடையே இவை பிரி்ந்து கிடப்பதால் முஸ்லீம்களின் வாக்குகளும் காலம் காலமாக பிளவுபட்டே கிடக்கின்றன.

காயிதேமில்லத்தின் முஸ்லீம் லீக்
1948ம் ஆண்டு மறைந்த கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் உருவாக்கிய கட்சிதான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக். பின்னர் இதன் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் அப்துல் சமது.

அப்துல் லத்தீப்பின் இந்திய தேசிய லீக்
இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீக்கைப் போலவே இன்னொரு சக்தியாக விளங்கியது அப்துல் லத்தீப்பை தமிழகத் தலைவராக கொண்ட இந்திய தேசிய லீக் கட்சி.

1995ல் பிறந்த தமுமுக
இந்த நிலையில் 1995ம் ஆண்டு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பிறந்தது. அதன் பிறகு இரு பெரும் முஸ்லீம் கட்சிகளுக்கு இணையாக இது வளர ஆரம்பித்தது. மனித நேய மக்கள் கட்சியாகவும் இது மலர்ந்தது.

மனித நேய ஜனநாயகக் கட்சி
தற்போது மனித நேய மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து புதிதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி பிறந்துள்ளது. தமிமுன் அன்சாரி தலைமையில் இந்தக் கட்சி செயல்படுகிறது.

திமுக கூட்டணியில்
சட்டசபைத தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. மனித நேய மக்கள் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

அதிமுக கூட்டணியில்
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில முஸ்லீம்லீக், இந்திய தெளஹீத் ஜமாத் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதிமுக அணிக்கு ஆதரவு தரப் போவதாக தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் முடிவு செய்துள்ளது.

ஒரே குடையில் வருவது எப்போது?
இப்படி முஸ்லீம் வாக்காளர்கள் பல்வேறு கட்சிகளாக இரு வேறு கூட்டணிகளில் பிரிந்து நிற்பதால் அவர்களின் வாக்குகளும் பிரிந்து கிடக்கின்றன. இன்றல்ல, நேற்றல்ல, பல காலமாக. இவர்கள் அனைவரும் ஒரே கட்சியாக, ஒரே குடையின் கீழ் வருவது எப்போது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

நிறைவேறாத கோரிக்கைகள்
அனைத்து முஸ்லீம் கட்சிகளும் தங்களது சமூகம் தொடர்பான பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்த வண்ணம் உள்ளனர். அதில் சில நிறைவேறியுள்ளன. பல இன்னும் கிடப்பிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications