விவசாயிகள் தற்கொலைக்கு 25 லட்சம் இழப்பீடு.. அமைச்சர்களை சந்தித்து முத்தரசன் கோரிக்கை!
விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கக் கோரி முத்தரசன் தலைமையில் விவசாயிகள் குழு ஒன்று அமைச்சர்களை சந்தித்தனர்.
சென்னை: விவசாயிகளின் தொடர் தற்கொலையை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் விவசாயிகள் குழு இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று அமைச்சர்கள் குழுவை சந்தித்து முறையிட்டது.
தண்ணீர் இன்றி காய்ந்து போன பயிர்களைப் பார்த்து அதிர்ச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் சுமார் 50 பேர், விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியில் மாண்டுள்ளனர். விவசாயம் பொய்த்துப் போயுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் விவசாயிகள் குழு ஒன்று இன்று தலைமைச் செயலகம் சென்றது. அங்கு நான்கு அமைச்சர்களின் குழுவைச் சந்தித்த விவசாயிகள், ஒரு மணி நேரம் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அமைச்சர்களுடான சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
வறட்சி மாநிலம்
வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் பொய்த்துப் போயுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம்
கர்நாடகத்தில் இருந்து முறையாக காவிரி தண்ணீரை திறந்துவிட வேண்டுமானால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதற்காக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரியில் இருந்து நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
25 லட்சம் இழப்பீடு
விவசாயிகளுக்கு எதிர்காலமே இல்லை என்ற நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் அதிர்ச்சியால் மரணம் அடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 45ஐ தாண்டிவிட்டது. யார் யார் இறந்தார்கள் என்ற கணக்கெடுத்து பட்டியல் ஒன்றை அமைச்சர்கள் குழுவிடம் கொடுத்துள்ளோம். தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வறட்சி இழப்பீடு
பயிர்கள் சாகுபடி செய்து காய்ந்துப் போய்கிடக்கிறது. அது எந்த வகையான பயிரை சாகுபடி செய்திருந்தாலும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. ஆகவே அவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
கருப்பு டன்னுக்கு ரூ.4000
கருப்பு விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகாலமாகவே தனியார் சர்க்கரை ஆலைகளில் பாக்கி உள்ளது. இந்தத் தொகையை இதுவரை தமிழக அரசு பெற்றுத் தரவில்லை. அதனை முழுமையாக பெற்று விவசாயிகளிடம் தமிழக அரசு தர வேண்டும். இந்த ஆண்டு கருப்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மராமத்துப் பணி
ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் இவைகளை தூர் வார வேண்டும். மழை நீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஆறுகளில் தூர் வாருகிற போது அதன் கீழ் பகுதியில் இருந்து தூர் வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முத்தரசன் தமிழக அரசிடம் வழங்கியுள்ளதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications