தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம்.. சிபிஐ முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம் பார்த்து வருகிறது என்று முத்தரசன் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். அது நடக்காத செயல் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடை, பொங்கலுக்கு விடுமுறை கிடையாது என்று தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முறையாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டமும் அங்கு நடைபெற்று வருகிறது. எனினும் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படவில்லை என்பதால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது என்பது தமிழர்களின் பண்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று முத்தரசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடப்பதை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் அவர் பெருமிதம் பேசினார்.
மேலும், பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்று மத்திய அரசு தமிழர்களின் பண்பாட்டு அழிப்பிற்கான நோட்டத்தைப் பார்த்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய உடன் மத்திய அரசு பின்வாங்கியது. அதே போன்று ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்த மக்களும் ஒன்றிணைந்து தங்களது கம்பீரமான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர வேண்டும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications