நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற உதவி பேராசிரியர் முருகன் பலிகடா: மனைவி சுஜா
உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா நிர்மலாதேவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
Recommended Video
மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தனது கணவன் குற்றமற்றவர் என்றும், யாரையோ காப்பாற்ற தங்களை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாகவும் முருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் உதவி பேராசிரியர் முருகனின் பெயரும் அடிப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் உள்ளார்.
இந்நிலையில், நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மதுரையில் விசாரணை நடத்தி வரும் அதிகாரி சந்தானத்தை முருகனின் மனைவி சுஜா இன்று நேரில் சந்தித்து தனது புகார் கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஜா, நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற தங்களை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாகவும், புத்தாக்க பயிற்சி நடத்தியவர்களை முதலில் விசாரிக்க வேண்டும் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஜா மேலும் பேசியதாவது:
புத்தாக்க பயிற்சிக்கு பங்கேற்க கருப்பசாமி மூலமாகவே முதன்முதலில் எனது கணவரை நிர்மலாதேவி சந்தித்தார். அதற்கு முதலில் எனது கணவர் மறுத்தார். ஆனால் தங்குவதற்கு அறை கேட்பது தொடர்பாக என்னுடைய கணவரை சந்தித்தார் நிர்மலாதேவி. அதற்கு கிளர்க்கிடம் போய் அறையை கேட்டுக் கொள்ளுங்கள் என எனது கணவர் அவரை அனுப்பி வைத்துவிட்டார்.
சஸ்பெண்ட் ஆன பிறகு நிர்மலாதேவி எனது கணவரை சந்தித்து இதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் கேட்டுக் கொண்டார். இது சம்பந்தமாக எதுவும் பேசக்கூடாது, கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி என்னுடைய கணவர் நிர்மலா தேவியை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
நிர்மலா தேவி எனது கணவர் பெயரை விசாரணையில் குறிப்பிட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கைது போலீசார் செய்துள்ளனர். நிர்மலா தேவியை புத்தாக்க பயிற்சிக்கு அனுமதித்தது யார்? ஏசி அறைக்கு அவரை மாற்றியது யார்? இதுபற்றியெல்லாம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தடயங்களை அழித்துவிட்டனர். தவறே செய்யாத நாங்கள் பலிகடாவாகியுள்ளோம்.
இவ்வாறு சுஜா பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.