மெரினாவில் போராட்டம் என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் வார்னிங்
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராட்டம் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாப்பூர் துணை கமிஷனர் எச்சரித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோகார்பனுக்கு எதிராகவும் சென்னை மெரினாவில் போராட்டம் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மெரினாவில் இளைஞர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் சென்னை மெரினாவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினாவில் போராட்டம் நடத்த போவதாக தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மேலும் மெரினா கடற்கரைக்கு 4 பேர் சேர்ந்து வர போலீஸார் தடை விதித்துள்ளனர். பொழுது போக்குவதற்காக மெரினாவுக்கு வந்த இளைஞர்களை போலீஸார் இழுத்துச் சென்றனர்.
கடற்கரைக்கு பொழுதுபோக்க வருபவர்களிடம் காவல்துறையினர் கெடுபிடியாக நடந்து கொள்வதாக இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
இந்த வரலாற்று போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே பாணியில் மீண்டும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் விபரீதமாகிவிடும் என்பதால் போலீசார் முன்கூட்டியே இதனை தடுத்து வருகின்றனர் என கூறப்படுகிறது.