மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலி… பொதுமக்கள் அச்சம்
மர்மக் காய்ச்சல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து இருவர் மர்மக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொசுக்களும் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில் இரண்டு பேர் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில்வே லைனை சேர்ந்தவர் முத்துசிவா. தச்சு வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும், இவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார்.
இதுபோல் நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே மேசியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரும் ஒரு வாரமாக காய்ச்சலால் அவதப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுகிறதா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.