காவல் துறையை கண்டித்து உண்ணாவிரதம்..நெல்லை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கைது
நெல்லை: திருநெல்வேலியில் காவல் துறை நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு போட்டியிடுகிறார். மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் அண்மையில் பிரசாரம் மேற்கொண்டார்.

சீமான் வருகையையொட்டி, தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று 7 இடங்களில் முறையாக பேனர்கள் வைக்கப்பட்டனவாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடத்தில் பேனர் வைக்க போலீஸார் அனுமதிக்காததுடன், தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமாக நடத்தியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை, முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி பாளையங்கோட்டையில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கம்புகள் கட்டி பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் பொதுமக்களுக்கு இடையூறின்றி, தாமிரவருணி நதிக்கரையில் அமர்ந்து வியனரசு, திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர் மறுத்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications