காவிரி: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த விக்னேஷ்.. சோகத்தில் மூழ்கியது மன்னார்குடி !
மன்னார்குடி: காவிரி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியின் போது அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் திடீரென தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி). அவரது மனைவி கண்ணகி, இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்து கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்செய்தி அறிந்த மன்னார்குடியில் உள்ள அவரது பெற்றோர்கள் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.