ஆளுநர் ஆட்சிக்கு பிறகு ரஜினியை வைத்து தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ.க திட்டம்: கொந்தளிக்கும் சீமான்
ஆளுநர் ஆட்சிக்கு பிறகு ரஜினியை வைத்து தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்து உள்ளார்.
சென்னை : விரைவில் தமிழகத்தில் ரஜினியை வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
களத்தில் இருந்த வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர்த்து, திமுக, பாஜக வேட்பாளர்கள் அனைவரும் டெபாஸிட் இழந்து உள்ளனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3800 வாக்குகள் கிடைத்து உள்ளது. இது கடந்த தேர்தலைவிட அதிகம்.
மாபெரும் கட்சிகளின் தோல்வி
கட்சியும், சின்னமும் கையில் இல்லாத போது தினகரனுக்கு கிடைத்து இருக்கும் மாபெரும் வெற்றி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த வெற்றியால் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையிலான அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற திமுக, மத்தியில் ஆளும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சோர்ந்து போய் இருக்கும் நிலையில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்த இடம் பிடித்து உள்ள நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
விரைவில் நாட்டிற்கு பேராபத்து
நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜகவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் விரைவில் நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார். நாம் தமிழர் பெற்று இருக்கும் வாக்குகள் அரசியல் களத்தில் மிக முக்கியமானவை.
பாஜகவின் மோசமான நிலை
மேலும், மாற்றம் என்பது மக்கள் மனதில் இல்லை; அவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தில் தான் உள்ளது என்று தெளிவாகி உள்ளது. இதை எல்லாம் தாண்டி இந்த தேர்தல் மட்டுமல்ல வேறு எந்த தேர்தலிலும் பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைய முடியாது. அது இப்போது அவர்களுக்கு நன்று தெரிந்து இருக்கும். அவர்களின் மேல் உள்ள கோபத்தில் தான் மக்கள் இத்தனை வாக்குகளை அவர்களுக்கு பரிசளித்து உள்ளனர்.
வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா?
நாட்டின் வளர்ச்சி என்று அவர்கள் எதை குறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஆளுநரை வைத்து ஆழம் பார்த்த பின் ஆட்சியைக் கலைத்து விட்டு, அடுத்து வரும் தேர்தலில் ரஜினியை வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு உள்ளது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார் .