7 தமிழர்கள் விடுதலை..கோட்டை நோக்கிய பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் - சீமான்
கோவை: பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தலைமையில் வேலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள பேரணியில் நானும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் பங்கேற்கிறோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி 11ம் தேதி வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேரறிவளாளன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தலைமையில் வேலூரில் வருகிற 11-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடக்கிறது. இதில் நானும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் பங்கேற்கிறோம்.
பேரறிவாளனை தமிழக அரசு 164-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. இதை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அற்புதம்மாள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். எனவே காத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.