தேசிய கட்சியை விட அதிக வாக்கு பெற்றது மகிழ்ச்சி... கலைக்கோட்டுதயம் ரியாக்ஷன்!
ஆர்கே நகர் தேர்தலில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனை விட அதிக வாக்குகள் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர்க கரு. நாகராஜனை விட அதிக வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் கூறியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து அதிமுக, திமுக வேட்பாளர்கள் யாரும் கருத்து கூற விரும்பவில்லை.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் வரலாற்றிலேயே மறக்க முடியாத தேர்தலாக அமைந்துவிட்டது. ஒரு புறம் பணப்பட்டுவாடா புகார் மற்றொரு புறம் ஜெயலலிதாவின் வெற்றியையை முறியடித்து அதிக வாக்குகள் பெற்று தினகரன் பெற்ற வெற்றி என்று ஆர்கே நகர் தேர்தல் புதிய பல திருப்பங்களைக் கொடுத்தது.
ஆர்கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். ஆயிரம், இரண்டாயிரம் என்று இருந்த வாக்குவித்தியாசமானது 19 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை சுமார் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி கண்டார் தினகரன்.
அப்செட்டில் மதுசூதனன்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ராணி மேரி கல்லூரிக்கு வந்து விட்டு போனவர் தான் அதிமுக வேட்பாளர் மதுசூதனன். நிலைமை தனக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்டு காலையிலேயே இடத்தை காலி செய்துவிட்டு புறப்பட்டுவிட்டார். போகிற போக்கில் ஒரு பாட்டை மட்டும் நொந் மனதோடு பாடிவிட்டு சென்றார். போகப் போகத் தெரியும்இந்த பூவின் வாசம் புரியும் என்று மட்டும் சொல்லி விட்டு போனார் மதுசூதனன்.
மருதுகணேஷ் சோகம்
இதே போன்று பலமான எதிர்க்கட்சியாக களமிறங்கிய திமுக வேட்பாளர் மருதுகணேசும் வாக்குப்பதிவு முடிவுகளை பார்த்து மனம் நொந்துவிட்டார். தோய்ந்த முகத்தோடு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறியவர், தேர்தல் தோல்வி குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை.
பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு
தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முடிவுகளைப் பார்த்து இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் அல்ல. பணம் கொடுத்தவர்களுக்கு ஏற்ப வாக்குகள் விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
பாஜகவை விட அதிக ஓட்டு
நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய கலைக்கோட்டுதயம் தேர்தல் முடிவுகள் வருத்தம் அளிப்பதாக கூறினார். எனினும் தேசிய கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றதில் மகிழ்ச்சியே என்றும் அவர் தெரிவித்தார்.