நான் 20 வருடம் மகாராஷ்டிராவில் வாழ்ந்தால் என்னை மராட்டியன் என ஏற்பார்களா.. சீமான் அதிரடி!
தமிழகத்தில் 44 ஆண்டுகள் வசித்தால் ரஜினிகாந்த் பச்சைத் தமிழரா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பிள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் திட்டவட்டமாக கூறினார். மேலும், ரஜினி வந்தால் என்னென்ன செய்வேன் என்று சொல்கிறாரோ அதனை தாங்களே செய்து கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வரலாறு தெரியுமா ரஜினிக்கு?
தமிழகத்தில் வரலாறு என்ன என்று ரஜினிக்கு தெரியுமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். தமிழர்களின் பரம்பரை, வரலாறு, போராட்டம் என எதுவும் தெரியாத ஒருவர் எங்களை ஆள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
எங்க வீட்டு ஒட்டடையை நாங்க அடிச்சிக்கிறோம்
"இது என் வீடு, இதில் எங்கே ஆணி இருக்கிறது; எங்கே ஒட்டடை இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். அதனை நாங்கள் சரி செய்துக் கொள்கிறோம்" என்று சீமான் ஆவேசமாக செய்தியாளர்களிடம் கூறினார்.
44 ஆண்டு வசித்தால் தமிழரா?
தமிழ் நாட்டில் 44 ஆண்டுகள் ரஜினிகாந்த் வசித்தால் பச்சைத் தமிழராக ஆகிவிடுவாரா? நான் 20 ஆண்டுகள் மகாராஷ்டிரத்திலே வாழ்ந்தால் என்னை மராட்டியன் என்று ஏற்றுக் கொள்வார்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.