நாடா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டம் தயார் - 76 பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்
நாடா புயல் நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 76 வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.
கடலூர்: புயலோ, கனமழையோ எது என்றாலும் கடலூர் தப்புவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தானே புயல் தாண்டவமாடிய கடலூரில், கடந்த ஆண்டு கனமழை காவு வாங்கியது. இந்த ஆண்டு நாடா புயல் வாரி சுருட்ட தயாராகி வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூர் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புகளை சரி செய்யவும், மக்களை பத்திரமாக மீட்கவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 76 வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். மிதவைப் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளன. 800 மெட்ரிக் டன் அரிசி தயாராக உள்ளது. தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மீட்புக்குழுவினர் முழுநேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் 28 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணிக்காக படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் சின்னத்தால் நாகை, கடலூர், எண்ணூர், காரைக்கால் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications