ஏற்காடு இடைத்தேர்தல்- அதிமுகவுக்கு நாடார் மகாஜன சங்கம் ஆதரவு!
சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நாடார் மகாஜன சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இது குறித்து நாடார் மகா ஜனசங்க தேர்தல் பிரசார குழுத் தலைவர் பெரீஸ் பி.மகேந்திரவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டுவர மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழகத்தில் இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டால் தமிழகத்தில் உள்ள சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயத்தின் வரலாற்றை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துகள் இடம் பெற்றிருந்த போது, நாடார்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் வழித் தோன்றல்கள் எனவும், அதற்கு சரித்திரபூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்று இந்த உலகுக்கு எடுத்து கூறிய முதல்வர்ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்குமரி மாவட்டத்தில் ஆதிக்க வர்க்கத்தினரின் அடிமைத்தளையில் சிக்கித்தவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அறிவொளியை ஏற்றிவைத்த அய்யா வைகுண்டரின் அவதாரத் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற நாடார் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்தோடு இணைக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்திய மார்ஷல் நேசமணியின் தியாகத்தை மதிக்கும் வகையில், மார்ஷல் நேசமணிக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாடார் சமுதாயத்தினரின் நலன் காத்துவரும் முதல்வர் ஜெயலலிதா செயல்பாடுகளுக்கு உற்ற துணையாக செயல்பட நாடார் மகாஜன சங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.சரோஜா- வுக்கு ஆதரவளிப்பது என நாடார் மகாஜன சங்கம் முடிவு செய்துள்ளது.
எனவே அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக தொகுதி முழுவதிலும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றிக்கு அயராது பாடுபடும் என்றார்.












Click it and Unblock the Notifications