நடிகர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு சரத்குமார் மனுத் தாக்கல்
சென்னை: நடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன.
தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் இன்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர்.
சரத்குமார் அணியில் மற்ற பதவிக்கு போட்டியிடுபவர்களின் பட்டியல் தயாரானதும் மற்றவர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று கூறுகின்றனர்.
மனுத் தாக்கலுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் " நாங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று 100% நம்பிக்கை இருக்கும்போது, நாங்கள் ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும். எங்களுக்கு எதிராகப் போட்டியிடுகிறவர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினாலும் நாங்கள் அதனை எதிர்த்து தேர்தல் நடக்க வழிவகை செய்திருக்கிறோம்" என்று கூறினார்.
விஷால் அணியினர் நாளை (2-ந்தேதி) சென்னையில் தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். அதன்பிறகு அந்த அணியில் மற்ற பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயாராகும்.
பட்டியல் நாளை தயாரானவுடன் விஷால் அணியினர் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி காலை(ஞாயிறு) பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந்(வியாழக்கிழமை) தேதி வெளியிடப்படும்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.