குடிபோதையில் குருவாயூர் ரயிலைக் கவிழ்க்க சதி... நாகர்கோவில் அருகே 5 பேர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரத்தில், அந்த ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்தில் ஆரல்வாய்மொழியை அடுத்த குருக்கள்மடம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் பாறாங்கற்களை வைத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் பாறாங்கற்களை அப்புறப்படுத்தினர். கற்கள் உரிய நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
இதையடுத்து ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினர். அதில், ஆரல்வாய்மொழி மற்றும் வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த வேலவ கண்ணன், அருள்ராஜ், சுபீன், சகாயராஜ், ராஜூ ஆகிய 5 வாலிபர்கள் தான் இவ்வாறு ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் பாறைகளை வைத்தது என தெரிய வந்தது.
இவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்து விட்டு போதையில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இன்று அவர்கள் 5 பேரையும் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது ரயிலை கவிழ்க்க சதி செய்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.