பலாத்கார புகார் கூறி பின்னர் பல்டி அடித்த நாகர்கோவில் மாணவி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பலாத்கார புகார் கூறிய மாணவி, திடீரென அதனை மாற்றிப் பேசியதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் அந்த பகுதியில் குடும்பம் குடும்பமாக தங்கி உள்ளனர்.
இதில், செண்பகராமன் புதூர் அருகே கட்டளைக்குளம் பகுதியில் தங்கியுள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், 14 வயது இளம்பெண் உள்ளார். அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செங்கல் சூளையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர், படிக்கும் பள்ளி மற்றும் பல இடங்களிலும் மகளை தேடினார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அந்த மாணவி அழுதபடி, வீடு திரும்பியுள்ளார்.
இதனால் பதறிப்போன பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதாவது, பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அங்குள்ள குளத்தில் தள்ளிவிட்டு சென்றதாகவும் மாணவி கூறினார்.
இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் மாணவியை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியிடமும், அவர் பலாத்காரப் புகார் கூறிய 3 இளைஞர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த மாணவி திடீரென பல்டி அடித்ததாக கூறப்படுகிறது. அதாவது தன்னை மேற்கு வங்காள வாலிபர்கள் பலாத்காரம் செய்யவில்லை என்றும், தான் அவர்களுடன் சாதாரணமாக பேசிவிட்டு தாமதமாக வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளார். இதனால் போலீசார் அந்த இளைஞார்கள் 3 பேரையும் விடுவித்தனர்.
முதலில் பலாத்கார புகார் கூறிய மாணவி, பிறகு திடீரென்று அதை மறுத்ததற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications