ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமானது - நக்மா
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா சந்தித்துப் பேசினார்.
சென்னை: நடிகர் ரஜினியை சந்தித்து பேசியதற்கும், இன்று ஸ்டாலினை சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நடிகை நக்மா கூறியுள்ளார்.
நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுசெயலாளருமான நக்மா இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, செயல் தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக சந்தித்ததால் அவருக்கு வாழ்த்து கூறியதாகத் தெரிவித்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்ற நக்மா, நேற்று நடிகர் ரஜினியுடனான சந்திப்புக்கும் தற்போது ஸ்டாலின் உடனான சந்திப்புக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை என்றார்.
திமுக தலைவர், கருணாநிதி வைரவிழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா அல்லது ராகுல் காந்தி கண்டிப்பாக வருவார்கள் என்றார்.
நேற்று ரஜினியை திடீரென சந்தித்து பேசினார் நக்மா. அப்போது அவர், ரஜினி என் நண்பர். அவரை நட்பு ரீதியாக தான் சந்திக்க வந்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறினார். இந்த நிலையில் ஸ்டாலின் உடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.