தீவிரமடையும் விவசாயிகளின் 28வது நாள் போராட்டம்.. நக்மா நேரில் சந்தித்து ஆதரவு
28வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லியில் 28வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. நீர்நிலைகள், குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு போனது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 28வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக திமுக எம்பி திருச்சி சிவா, கனிமொழி, ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன், தமிழக அமைச்சர் துரைக்கண்ணு, லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்ஸிராணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அப்போது பேசிய நக்மா, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நமது கடமை என்று கூறினார்.