ஜல்லிக்கட்டு தடைக்கு நக்மா வரவேற்பு.. மக்களை திசை திருப்புகிறார்களாம் அரசியல்வாதிகள்!
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நடிகை நக்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நின்று கொண்டு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் நக்மா.
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சத்யமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா, செயலாளர் ஹசீனா சையத், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் நக்மா. அப்போது செய்தியாளர்கள், ஜல்லிக்கட்டு தடை குறித்து கேட்டபோது இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. மக்களை திசை திருப்புதவற்காகவே கலாச்சாரம், உணர்வு என்று கூறி மக்களை குழப்புகிறார்கள். அரசியல் ரீதியில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்றார் நக்மா.
மற்ற விஷயங்கள் குறித்து நக்மா கூறுகையில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி தான். அவரைத்தான் கட்சி மேலிடம் தலைவர் பதவியில் நியமித்துள்ளது. கோஷ்டி பூசல் இருப்பது சகஜம்தான். அதை பேசி தீர்த்து கொள்ளலாம். அதற்காக தனித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செயல்பட்டால் அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் ஊரில் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை.
தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கேட்போம். மத்திய மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்கள், எதையும் செயல்படுத்தவில்லை. சமீபத்திய வெள்ள பாதிப்பின் போது தமிழக அரசு உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அரசாங்கம் உதவியதை விட பொதுமக்கள் தான் பெருமளவில் நிவாரண பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் வாரி வழங்கிய நிவாரண பொருட்களில் ஆளும் கட்சியினர் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி கொடுத்தனர். இதை நான் மட்டும் சொல்லவில்லை. எல்லோரும் கூறுகிறார்கள். சமூக வலைதளங்களும் சுட்டி காட்டின என்றார் அவர்.












Click it and Unblock the Notifications