முருகனை தொடர்ந்து சிறைக்குள் நளினியும் உண்ணாவிரதம்.. வழக்கறிஞர் தகவல்!
கணவர் முருகனை சந்திப்பதற்கான தடையை திரும்ப பெற கோரி ஆகஸ்ட் 29 முதல் நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் கணவர் முருகனை சந்திக்கவுள்ள தடையை திரும்ப பெறக் கோரி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

15 நாள்களுக்கு ஒரு முறை
பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நளினியை முருகன் சந்தித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முருகனின் அறையை காவலர்கள் சோதனை செய்தனர்.

செல்போன் சிக்கியது
அப்போது அங்கு சுவாமி படங்களுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முருகன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண்கள் சிறையில் நளினியை சந்தித்து பேச அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

18 முதல் உண்ணாவிரதம்
இந்நிலையில் ஜீவசமாதி அடைவதற்காக முருகன் கடந்த 18-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

3 மாதங்களுக்கு தடை
இது சிறை விதிகளை மீறும் செயலாகும். இதனால் 19-ஆம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு அவரை, மனைவி உள்ளிட்ட உறவினர்கள் யாரும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 முதல் நளினியும் உண்ணாவிரதம்
இந்நிலையில் முருகனின் உடல் நிலை குறித்து அறிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி சிறைக்கு சென்றார். அப்போது நளினியையும் சந்தித்து பேசினார். இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், கணவரை சந்திக்க விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற கோரி வரும் 29-ஆம் தேதி முதல் நளினியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார் என்றார் வழக்கறிஞர் புகழேந்தி.












Click it and Unblock the Notifications