எங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல- 25 ஆண்டு சிறைவாசத்தில் முதல்முறையாக நளினி பேட்டி
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எங்களது 7 பேர் கைகளும் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல; நாங்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் என 25 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முதல் முறையாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று காலமானார்.

அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நளினிக்கு 12 மணிநேர பரோல் அனுமதிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சென்னை கோட்டூர்புரத்தில் சகோதரர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நளினி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
25 ஆண்டுகாலமாக நான், என் கணவர் மற்றும் 5 சகோதரர்கள் சிறையில் இருக்கிறோம். நாங்கள் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்கள். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

எங்களுடைய யாருடைய கையும் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டது அல்ல. ராஜிவ் காந்தி குள்ளமா, கருப்பா, வெள்ளையா, சிவப்பா என்று கூட தெரியாத அப்பாவிகள் நாங்கள்.
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் 24 வயதாகிவிட்டது. அவள் ஏன் எங்களைப் பிரிந்திருக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் எங்கள் 7 பேரையும் நிச்சயம் விடுதலை செய்வார் என நம்பிக்கையோடு வாழ்கிறோம்.
இவ்வாறு நளினி கூறினார்.












Click it and Unblock the Notifications