கயத்தாறு சுங்கசாவடியை இழுத்து மூடி நாம் தமிழர் கட்சி போராட்டம்
கயத்தாறு சுங்கசாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
Recommended Video
கயத்தாறு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கயத்தாறு சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியினர் இன்று கயத்தாறு சுங்கச்சாவடியை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள 42 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் முழக்கமிட்டனர்.
பின்னர் திடீரென தரையில் அமர்ந்த போராட்டக்காரர்கள் எந்த வாகனத்துக்கும் சாவடியில் கட்டணம் பெறக்கூடாது எனவும், சுங்கவரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாக கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி முற்றுகையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்தனர்.