மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த மதுகுடித்த 4 மாணவிகள்- பள்ளியில் சேர்த்துக் கொள்ள கலெக்டர் பரிந்துரை
நாமக்கல்: நாமக்கல், திருச்செங்கோட்டில் வகுப்பறையில் மது குடித்து சிக்கிய மாணவிகள் கலெக்டரின் பரிந்துரையை ஏற்று மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடந்த தேர்வின் போது பிளஸ்-1 படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது குடித்து போதையில் மயங்கினர். இதையடுத்து அவர்களை பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி டிஸ்மிஸ் செய்தார். உயர் அதிகாரிகளிடம் கேட்காமல் மாணவிகளை நீக்கியதற்கு கலெக்டரும், கல்வி அலுவலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 4 மாணவிகளை மற்றொரு பள்ளிக்கு வரவழைத்து முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் விசாரணை நடத்தி, மன்னிப்பு கடிதமும், மது எப்படி கிடைத்தது என்ற விவரத்தையும் எழுதி வாங்கினார். மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, கலெக்டர் தட்சிணாமூர்த்தி பரிந்துரை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளியில் மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. தற்போது மாணவிகளை பள்ளியில் சேர்க்காவிட்டால் இதை சாதகமாக பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடக்கோரி பல அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும். எனவே மாணவிகளை அதே பள்ளியில் சேர்த்தால் அதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கமுடியும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. எனவே மாணவிகள் மீண்டும் அதே பள்ளியில் சேர்க்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications