ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி யாகம்... பயபக்தியுடன் பங்கேற்ற நாமக்கல் கலெக்டர்!
நாமக்கல்: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று வேண்டி நடத்தப்பட்ட யாகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றது சர்ச்சை எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற தமிழகத்தில் பல்வேறு யாகங்களும், வித்தியாசமான நேர்த்திக்கடன்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்களில் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

ஜெ.வுக்கான யாகங்களில் அரசு அதிகாரிகள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய யாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

மதுரை ஆட்சியரின் பால்குடம்
அது போல மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையில் ஜெயலலிதாவுக்காக நடைபெற்ற பால்குடத்தில் கலந்து கொண்டார்.

யாகத்தில் நாமக்கல் ஆட்சியர்
இந்நிலையில் சித்ரா பொளர்ணமியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லிமலை மன்மத ரதி கோயிலில் நடைபெற்ற யாகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ. கோவிலில் ஆட்சியர் வழிபாடு
சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கத்தின் குலதெய்வமான இக்கோயிலில் ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர நடைபெற்ற இந்த யாகத்தில் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றார்.

பதவியை பறிக்க வேண்டும்!!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்கிலிருந்து விடுதலை பெற்று மீண்டும், முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்று கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்கள், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்களின் ஐ.ஏ.எஸ் பதவிளை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications