காங்கிரசும், பாஜகவும், கண்ணீரில் உப்பெடுக்கும் பாவிகள்.. நாஞ்சில் சம்பத் சீற்றம்
சென்னை: காங்கிரசையும், பாஜகவையும் பாவிகள் என வர்ணித்துள்ளார் அதிமுக செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நிலையில், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக அரசை மோடி அரசு கைப்பற்ற முயலுவதாகவும், அதற்கு எதிராக, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ராகுல் காந்தி வந்ததாகவும், காங்கிரஸ் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறுகையில்,
"அரசு நிர்வாகத்தை, கண்காணிப்பதற்கும், கவனிப்பதற்கும் ஆளுநர் இருக்கிறார். ஆளுநரே அதனைத் தீர்மானிப்பார். தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் எப்படிப் போக வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவாக அறிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில், பொதுப்பணித் துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் ஆளுநர் கருத்துக் கேட்டுள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே, அரசு முடங்கிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றப் பேச்சு" என்று கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து மோடி அரசு உளவு பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது காங்கிரஸ் - பி.ஜே.பி. கட்சிகளுக்கு இடையிலான பனிப்போரின் வெளிப்பாடு. ராகுல் காந்தி வந்து முதல்வரை நலம் விசாரித்துச் சென்றதை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஆனால், இதிலும் அரசியல் செய்கிறவர்கள் 'கண்ணீரில் உப்பெடுக்கிற பாவிகள்' என்றே சொல்வேன்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications