அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது.. நாஞ்சில் சம்பத் பொளேர்
நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை இன்று நேரில் சந்தித்து நாஞ்சில் சம்பத் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா, ஜெயக்குமாருக்கு எந்தப் பதவியும் அளிக்காமல் ஒதுக்கி வைத்திருந்தார் என்றும், அவருக்கு மீனவர்கள் செயலாளர் பதவியைக் கொடுத்தது சசிகலா என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பொறுப்பை வாங்கிக் கொடுத்தவர் டிடிவி தினகரன் என்றும் நன்றி மறந்து நாகரிகம் கெட்டு ஜெயக்குமார் பேசுகிறப் பேச்சை அலட்சியப்படுத்துகிறார் தினகரன் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், விசுவாசம் இல்லாமல் தான்தோன்றித்தனமாக பேசும் அமைச்சர் ஜெயக்குமார் ஏதோ பயத்தில் உளறுகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.