கூட பிறந்த அண்ணனையே பலி கொடுத்தவர் ஸ்டாலின்: நாஞ்சில் சம்பத்
விழுப்புரம்: ஒரு சிலை பிரதமராக இருப்பதை பார்க்கிறோம் என்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.
அவர் செஞ்சி காந்தி பஜாரில் திறந்த வேனில் இருந்தபடியே வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஸ்டாலின்
அதிமுகவை விட்டுவிட்டு இந்தியாவில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. ஸ்டாலினை ஒன்று கேட்கிறேன். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் யார் பிரதமர் என்று தெரிவிக்க முடியுமா? நடப்பது ஒன்றும் சட்டசபை தேர்தல் அல்ல நாடாளுமன்ற தேர்தல்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. இருப்பினும் இனி திமுகவால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது.
திமுக
திமுக ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், காலாவதியான செக். ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி திமுக திணறிக் கொண்டிருக்கிறது. இனி எப்பொழுதும் தமிழகத்தை ஆளப் போவது அதிமுக தான்.
அண்ணன்
ஸ்டாலின் கூடப் பிறந்த அண்ணனையே பலி கொடுத்துவிட்டார். அவர் தன் இருப்பை உறுதி செய்யத் தான் உலா வந்து கொண்டிருக்கிறார். உறுதி செய்யாவிட்டால் அந்த இடத்திற்கு ஆபத்து வந்துவிடும் அல்லவா. வாரிசு அரசியல் திமுகவை பிடித்து ஆட்டுகிறது.
தேசிங்கு ராஜன்
தேசிங்கு ராஜன் ஆண்ட பூமி இது. மத நல்லிணகத்திற்கு பட்டுப் பாவாடை விரித்தது செஞ்சியில் தான். இந்த மண்ணில் நின்று கொண்டு கேட்கிறேன். 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடு அளித்தது உண்டா? இல்லை கருணாநிதி தான் கேட்டு வாங்கிக் கொடுத்தாரா?
சிலை பிரதமர்
இந்திய ராணுவ வீரரை சுட்டுக் கொன்று தலையை துண்டித்துவிட்டு போகிறது பாகிஸ்தான் ராணுவம். அதை பார்த்தும் இந்தியா பேசாமல் இருந்தது. ஒரு சிலை பிரதமராக இருப்பதை பார்க்கிறோம். காங்கிரஸோடு சேர்த்து திமுகவுக்கும் கல்லறை கட்ட வேண்டும்.
ஜெயலலிதா
ஒரு புதிய இந்தியாவை படைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்தியாவை ஜெயலலிதா தலைமையில் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது என்றார் சம்பத்.